×

கடல் மட்டத்தில் இருந்து 1340 மீட்டர் உயரத்தில் அரிசி கொம்பன் யானை

நாகர்கோவில், ஜூன் 21:கடல் மட்டத்திற்கு மேல் 1340 மீ உயரத்தில் அரிசிக்கொம்பன் யானை வலம் வருகிறது என்று வனத்துறை தெரிவித்துள்ளது. கேரளா மாநில பகுதிகள் மற்றும் தேனி மாவட்டம் கம்பம் உள்ளிட்ட இடங்களில் உலாவி வந்த அரிசி கொம்பன் யானை கிராமங்களில் நுழைந்து அந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தியது. இதனையடுத்து வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் விட்டனர். குமரி மாவட்ட வனப்பகுதியில் யானை இதுவரை நுழையவில்லை. குமரி வனத்துறையினரும் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் யானை நலமுடன் உள்ளதாகவும், வனப்பகுதியில் வசிக்க முயற்சி செய்து வருகிறது என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘அரிசி கொம்பன் யானை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள பல்வேறு வாழிடங்களில் கடந்த 13 நாட்களாக உலவி வருகிறது. இந்த காடுகளில் உள்ள புற்கள், செடிகொடிகள் மற்றும் ஓடைகளில் வளர்ந்துள்ள தாவரங்களை உணவாக உண்டு வருகிறது. களக்காடு மற்றும் கன்னியாகுமரி கோட்டங்களுக்கு உட்பட்ட வன கால்நடை அலுவலர்கள், வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய 36 முன்கள பணியாளர்கள் முத்துக்குழிவயல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் யானை நடமாட்டத்தையும் மற்ற யானை கூட்டங்களுக்கான தொடர்புகளையும் கண்காணித்து வருகின்றனர்.

யானை ஆரோக்கியமாக இருப்பதையும், சோலை மற்றும் புல்வெளி பகுதியில் வசிக்க முயற்சிப்பதையும் தானியங்கி புகைப்பட கருவி மூலம் பெறப்படும் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. ரேடியோ காலர் சிக்னல்கள் மூலமும் தற்போதைய கண்காணிப்பு அடிப்படையிலும் அரிசி கொம்பன் யானையாது 1340 மீட்டர் கடல் மட்டத்திற்கு மேல் உள்ள கோதையாறு ஆற்றின் பிறப்பிடத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் காணப்படுகிறது’ என்று தெரிவித்தனர்.

The post கடல் மட்டத்தில் இருந்து 1340 மீட்டர் உயரத்தில் அரிசி கொம்பன் யானை appeared first on Dinakaran.

Tags : Nagargo ,Department of Justice ,Dinakaran ,
× RELATED 4 ஆண்டுகளுக்கு பின் கைதான நாகர்கோவில்...